SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Friday, May 31, 2013

AN ANALYSIS ON ENGLISH MEDIUM SECTIONS

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவு சரியா?
ஜி.மீனாட்சி

வரும் கல்வியாண்டு முதல் தேவைப்படும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் சட்டப்பேரவையில் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கல்வியாளர்களின் கருத்துகள் இதோ...

எஸ்.எஸ்.ராஜகோபாலன் (கல்வியாளர்): தமிழ்நாட்டில் 1978-ஆம் ஆண்டு வரை 99 சதவீத மாணவர்கள் பொதுப் பள்ளிகளிலும், 98 சதவீத மாணவர்கள் தாய்மொழிவழிக் கல்வி வழியாகவும் படித்து வந்தனர். கல்விக்கான தனது நிதிச் சுமையைக் குறைத்துக் கொள்ள அரசு, தனியார் கல்விக்கூடங்களை பட்டி தொட்டியெல்லாம் தொடங்க அனுமதி அளித்தது. புதிய பள்ளிகள், ஆங்கிலவழி மெட்ரிக் பள்ளிகள் அத்துடன், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதிலும், புதிய பணி இடங்களை நிரப்புவதிலும் அரசு அக்கறை செலுத்தவில்லை. பொதுத் தேர்வு முடிவுகளே ஒரு பள்ளியின் தரத்தைக் குறிக்கும் என்ற தவறான எண்ணத்தால் தனியார் பள்ளிகள் கல்வியியல், உளவியல் கோட்பாடுகளுக்கு முரண்பட்டு மனன முறைக் கல்வியை வளர்த்தன. ஆங்கிலவழிக் கல்வியே சிறந்தது என்று மக்கள் எண்ணும் நிலை உண்டாயிற்று. அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி புகுத்தப்படும் என்ற அரசின் அறிவிக்கை பிற்போக்குத்தனமானது. ஆங்கிலவழிக் கல்வி காரணமாகப் பெருமளவில் மாணவர் பள்ளியினின்று விலகவும் நேரிடும். தமிழிற்கும், தமிழர் நலனிற்கும் பாதிப்பை உண்டாக்கும். அரசுப் பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு வரை வகுப்பிற்கு ஓர் ஆசிரியர் நியமித்து தரமான கல்வி அளிக்கவே அரசு முற்பட வேண்டும்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு (பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் மாநில பொதுச் செயலர்): அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்படும் என்றுதான் அரசு அறிவித்துள்ளதே தவிர, அதற்கு ஒதுக்கப்படும் நிதி எவ்வளவு? ஆங்கில மொழி ஆசிரியர்கள் எத்தனை பேர் நியமிக்கப்படுவார்கள்? என்பது குறித்தெல்லாம் அரசு எதையும் சொல்லவில்லை.  கோத்தாரி கமிஷன், முத்துக்குமரன் கமிஷன், யஷ்பால் கமிஷன் உள்ளிட்ட பல்வேறு நிபுணர் குழுக்களும் தாய்மொழி வழிக் கல்வியையே அங்கீகரித்துள்ளன. தேசிய கல்வித் திட்டத்தைத் தழுவி கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு கல்வித் திட்டத்திலும் (2009) பயிற்று மொழி தாய்மொழியாகத்தான் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஸ்காண்டிநேவியன் நாடுகளில் தாய்மொழியிலேயே கல்வி கற்றுக் கொடுக்கிறார்கள். ஆங்கில வழியில் கற்பிப்பதன் மூலம் மாணவர்களிடையே எந்தவிதமான மாற்றத்தையும் கொண்டு வந்துவிட முடியாது. எதையும் புரிந்து படித்தால்தான் அறிவைப் பெருக்கிக் கொள்ள முடியும். இதற்கு தாய்மொழியே சிறந்தது. ஆங்கில மொழியில் சொல்லிக் கொடுக்கும்போது, மாணவர்கள் மனப்பாடம் செய்துதான் படிக்க வேண்டி வரும். திருப்பூரில் 500 குழந்தைகள் படிக்கும் தாய் தமிழ்ப் பள்ளி மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் தங்கள் குழந்தைகளை கட்டணம் செலுத்தி பெற்றோர் படிக்க வைக்கிறார்கள். எந்த பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கில வழிக் கல்வி வேண்டும் என்று கேட்பதில்லை. தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் தாய்மொழியில் கல்வி கற்றுக் கொடுக்கவேண்டும். வேண்டுமானால், ஆங்கிலம் ஒரு பாடமாக இருக்கலாம்.

‘ஆயிஷா’ நடராஜன் (எழுத்தாளர்): அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் சுமார் 30 சதவீதக் குழந்தைகள் தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளுக்குத் தாவிவிட்டதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதனால், நமது தமிழக அரசுக்கு தொடக்கப் பள்ளிக் கல்வி பற்றி ஒரு பதற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் அரசு அதிகாரிகள், நகரின் முக்கியப் பிரமுகர்களின் குழந்தைகள் இப்போதும் அரசுப் பள்ளிகளில்தான் படித்து வருகிறார்கள். உள்ளூர் அமைப்புகளின் ஆதரவுடன், அங்கெல்லாம் அரசுப் பள்ளிகள் மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றன. சென்னை போன்ற ஒரு சில மாவட்டங்களில்தான், வறுமைக் கோட்டுக்குக்கீழ் இருப்பவர்கள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் படிக்கும் நிலை உள்ளது.  அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியைக் கொண்டு வர எண்ணியிருக்கும் அரசு, மெட்ரிக்குலேஷன், நர்சரி மற்றும் தனியார் பள்ளிகளில் இரண்டு பிரிவுகளிலாவது கட்டாயமாக தமிழ்ப் பிரிவை ஆரம்பிக்கட்டுமே! ஏன் செய்யவில்லை? இப்போதே, தமிழ் பேசாத ஒரு தலைமுறையை நாம் உருவாக்கிவிட்டோம். தாய்மொழியில் கல்வி கற்பிக்காவிட்டால், இந்த நிலை இன்னமும் மோசமடையும். அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ், அரசுப் பள்ளிகளில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஒருங்கிணைந்த தொடர் மதிப்பீட்டு முறை (சி.சி.ஏ.), செயல்வழிக் கற்றல் போன்றவை மெட்ரிக்குலேஷன் பள்ளிகளிலோ, தனியார் பள்ளிகளிலோ இன்னமும் அமல்படுத்தப்படவில்லை. சமச்சீர் கல்வியென்றால், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியான கற்பிக்கும் முறை வேண்டும் என்பதுதானே? அரசு, முதலில் அந்த முறையை அமல்படுத்தட்டும்.

சோ.இராமு (அரசுப் பள்ளி ஆசிரியர், செம்பட்டி): அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கதே. ஆங்கிலப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கவேண்டும் என்பதே பெரும்பாலான பெற்றோர்களின் விருப்பமாக இருக்கிறது. என்ன விலை கொடுத்து  வேண்டுமானாலும் ஆங்கிலக் கல்வியை தங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டும் என்பதற்காக செலவைப் பற்றிக்கூட அவர்கள் கவலைப்படுவதில்லை. அரசுப் பள்ளிகளிலும் தொடக்கப் பள்ளி மாணவர் சேர்க்கை மிகவும் மோசமாக உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டுமானால், ஆங்கில வழிப் பள்ளிகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. இலவசக் கல்வி, கல்வி உதவித்தொகை, சத்துணவு  மட்டுமல்லாமல் இலவச பேக், செருப்பு என்று சுமார் 12 பொருட்களை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு இலவசமாக வழங்குகிறது. அப்படியும் மாணவர் சேர்க்கை போதுமான அளவில் இல்லை. எனவே, அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியைக் கொண்டு வந்தால் மாணவர் சேர்க்கை நிச்சயம் உயரும்.

ஆர்.ஜானகி (பெற்றோர்):  என் மகள் அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். தாய் மொழியில் படிப்பதால், பாடங்களை எளிதில் புரிந்துகொள்கிறாள். அவள் பெரிய வகுப்புகளுக்குப் போகும்போது, அவளே விருப்பப்பட்டால், ஆங்கில வழிப் பிரிவில் சேர்த்துவிடுவோம். ஒரு குறிப்பிட்ட வயதுவரை தாய் மொழியில் கல்வி கற்பிப்பதுதான் குழந்தைகளுக்கு நல்லது. பெரியவர்களானதும், ஆங்கில வழியில் சேர்த்துவிடலாம்.

எஸ்.சதாசிவம் (பெற்றோர்) :  அரசுப் பள்ளிகளிலேயே ஆங்கில வழிப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டால், என் பிள்ளைகளை நிச்சயம் அதில்தான் சேர்ப்பேன். ஆங்கிலத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு, இந்தச் சமூகத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் காணப்படுகிறது. மேற்படிப்புக்கு ஆங்கில மொழி அவசியம் என்பதால், அதை ஆரம்பப் பள்ளி முதலே கற்பிக்கவேண்டும் என்பதுதான் என் கருத்து.

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி
கீதா

சரண்டர்!

ச. தமிழ்செல்வன்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்

தேவைப்படும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும், வரும் கல்வி ஆண்டில், ஆங்கிலவழிக் கல்வி வகுப்புகள் துவங்கப்படும். இதனால், ஆண்டுக்கு 1.5 லட்சம் மாணவ, மாணவியர் பயன் பெறுவர்’ இவ்வாறு தமிழக கல்வி அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

ஆங்கிலத்தை ஒரு பாடமாகப் பயில்வதற்கு உரிய வசதிகள் செய்துகொடுப்பதை எதிர்ப்பதற்கில்லை. ஆனால், அனைத்துப் பாடங்களையும் புரிந்துகொள்வதற்கான பயிற்றுமொழியே ஆங்கிலமாகத்தான் இருக்கும் என்பது அறிவியல்பூர்வமற்றது. பாடங்களைப் புரிந்து பயில்வதற்கு வழிசெய்யாமல், வெறும் மனப்பாட முறையை வளர்க்கிற இந்த நடவடிக்கையால் உண்மையில் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்குப் பெரும் கேடுதான் விளையும்.

ஏற்கெனவே தமிழகத்தில் தனியார் பள்ளிகள் ஆங்கிலவழிக் கல்வியின் பெயரால் பெரும் எண்ணிக்கையிலான மாணவர்களின் இயற்கையான புரிதல் திறனை அழித்துள்ளன. தனியார் பள்ளிகளை நாடும் பெற்றோர்களை அரசுப் பள்ளிகளை நோக்கி ஈர்ப்பதற்காக என்ற பெயரில் எடுக்கப்படும் இந்த நடவடிக்கை, பயிற்றுமொழி தொடர்பான தனியார் நிர்வாகங்களின் மூர்க்கத்தனத்தை நியாயப்படுத்துவதாகவே இருக்கிறது.

உலகெங்கும் உள்ள கல்வியாளர்கள், மொழியியல் வல்லுநர்கள், மக்கள் நலக் கல்வி இயக்கங்கள் தாய்மொழிவழிப் பயிற்சியே சுயமான சிந்தனை வளர்ச்சிக்கும் சரியான புரிதலோடு கூடிய கல்வி மேம்பாட்டிற்கும் ஏற்றது என்கிற அறிவியல் பூர்வமான ஆய்வுகளின் அடிப்படையில் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். தாய்மொழி அல்லாத வேறு மொழி வழியாகப் பயில்வது, திறமையான அடிமைகளை உருவாக்குமேயன்றி சுயமான அறிவியல் ஆராய்ச்சியாளர்களையோ, கண்டுபிடிப்பாளர்களையோ உருவாக்காது.

உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்ற மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஏற்ப, நவீன அடிமைகளை உருவாக்குவதற்கு ஏற்பவே அதன் கல்வி மற்றும் மொழிக் கொள்கைகள் வார்க்கப்படுகின்றன. அந்தக் கொள்கைகளை எதிர்ப்பதற்கு மாறாக, இவ்வாறு அரசுப்பள்ளிகளிலேயே ஆங்கிலப் பயிற்றுமொழியைத் திணிப்பது என்பது அவற்றின்முன் சரணடைகிற செயலாகவே இருக்கிறது."



சம வாய்ப்பு!

டாக்டர். உமா
உதவிப் பேராசிரியை, இந்திரா காந்தி திறந்தவெளிப் பல்கலைக்கழகம், புதுதில்லி

தமிழக அரசின் இந்த சமீபத்திய முடிவு, வரவேற்கப்பட வேண்டிய விஷயம். தங்களுக்கு விருப்பமான மீடியத்தை தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பு,  தற்போது குறிப்பட்ட சதவிகித மாணவர்களுக்கு மட்டுமே உள்ளது. தமிழக அரசின் இந்த முடிவு, தாங்கள் விரும்பிய மீடியத்தை தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பை எல்லா மாணவர்களுக்கும் சமமாக அளித்துள்ளது. தங்கள் குழந்தையை ஆங்கில மீடியத்தில் படிக்க வைக்கலாமா, தமிழ் மீடியத்திலா என்கிற தேர்வும் (choice) பெற்றோர்களுக்கு கிடைத்துள்ளது. அதை அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும்.

தற்போது பொதுவாக இருக்கும் ஒரு பிரச்சினை, பள்ளிக் கல்வி முழுவதும் தமிழிலேயே படித்துவிட்டு கல்லூரிக்கு வரும் மாணவர்களால் பாடத்தை சரியாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆங்கில மீடியத்தில் படித்த மாணவர்களோடு இயல்பாகப் பழக முடிவதில்லை. ஒருவித தாழ்வு மனப்பான்மையுடனேயே இருக்கிறார்கள்.

ஆங்கிலம்தான் சிறந்த மொழி என்பதற்காகவோ, அதில் படித்தால்தான் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதற்காகவோ மட்டுமே ஆங்கிலத்தை சிபாரிசு செய்வதில்லை. உலகம் முழுவதும் நடைமுறையில் இருக்கும் அலுவல் மொழி அது. அறிவியல், தொழில்நுட்பம் போன்றவற்றை எப்படித் தமிழில் கற்றுத் தர முடியும். அதற்கான சொற்றொடர்கள் தமிழில் இருக்கிறதா? அப்படியே இருந்தாலும் அவை அனைத்தும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் வழக்கத்தில் இல்லை. நடைமுறையில் எளிமையாக, பரிச்சயமாக உள்ள ஆங்கில வார்த்தைகளைக் கொண்டு அறிவியலைக் கற்றுக் கொடுத்தால்தான் மாணவர்களால் புரிந்துகொள்ள இயலும். அப்படிப் படித்துவிட்டு கல்லூரிக்குள் நுழையும் மாணவர்கள், தன்னம்பிக்கையுடன் கல்லூரிப் பாடத்தை கற்றுக் கொள்ள முடிகிறது.

ஆங்கில மீடியம் படித்த மாணவர்களுக்கு இணையான நிலைக்கு தமிழ் வழிக் கல்வி மாணவர்கள் வருவதற்கு பல மாதங்கள் ஆகின்றன. இன்னும் சில தமிழ்வழிக் கல்வி மாணவர்கள் ஆங்கிலத்தில் சொல்வதை ஓரளவு புரிந்துகொண்டாலும் அதை  எழுதுவதற்கோ, திரும்பச் சொல்வதற்கோ அவர்களால் முடிவதில்லை. ஆரம்பக் கல்வியே ஆங்கிலத்தில் படித்துவிட்டால், இந்த நடைமுறைச் சிக்கல்களை மிக எளிதாகத் தவிர்த்துவிட முடியும். உலகமயமாக்கல் என்பது தமிழக அரசோ, மத்திய அரசோ தீர்மானிக்கும் விஷயம் கிடையாது. இது சர்வதேச அளவில் நடக்கும் மாற்றம். மாற்றத்தை நாம் ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப நம்மைத் தயார் செய்து கொண்டால்தான் அவர்களோடு போட்டி போட முடியும். இல்லை, நான் இப்படியேதான் இருப்பேன் என்று சொன்னால் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம்.

தமிழக அரசின் இந்தத் திட்டத்தை எதிர்ப்பதை விட்டுவிட்டு, மாணவர்களின் மொழித் திறனை வளர்க்கத் தேவையானதைச் செய்ய வேண்டும். இதற்காக ஆரம்பப் பள்ளிகளில் மொழியை (தமிழ், ஆங்கிலம் இரண்டும்) கற்றுக் கொடுக்கப் போதுமான ஆசிரியர்களை நியமிக்க அரசை வற்புறுத்த வேண்டும். நம்முடைய கருத்துக்கள், விவாதங்கள், சிந்தனைகள் அனைத்தும் தற்போதுள்ள உலகமயமாக்கல் சூழலில் நம் குழந்தைகளுக்கு அறிவான, தன்னம்பிக்கை தரக்கூடிய, தரம் வாய்ந்த கல்வியை தருவது எப்படி என்பதை நோக்கியே இருக்க வேண்டும்."

ENGLISH MEDIUM SECTIONS -UNDER PROCESS

பறக்கிறது ஆணை! ஆங்கில வழிக்கல்விக்கு தயாராகும் அரசுப் பள்ளிகள்!

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் இந்த ஆண்டு முதல் அரசுப் பள்ளிகள் மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் உயர் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியைத் தொடங்குவதற்கு நெல்லை மாவட்டத்திலுள்ள அரசு சார்பு பள்ளிகள் தயாராகி வருகின்றன. குறிப்பாக நெல்லை மாநகராட்சிக்குப் பள்ளிகளில ஆங்கில வழிக்கல்வி பற்றிய குறிப்பு போர்டினை வைத்துள்ளனர். 
பள்ளி திறக்கும் நாள் தொடங்கி, புதிய மாணவ மாணவியார்களைச் சேர்க்கவும் அவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்கள் எழுது பொருட்கள் உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு மாணவர்கள் அதிக அளவில் சேராத பள்ளிகளின் ஏரியாப்பகுதிகளில் விழிப்புணாவு பிரச்சாரம் மேற் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒரு வகுப்பிற்கு 20 மாணவர்கள் என குறியீடு வைத்து திட்டமிட்டு செயல்படுகிறோம் தேவையான பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன. நாங்கள் எதிர் பாரத்ததை விட அதிக அளவில் மாணவர்கள் சேருவார்கள் என்கிறார்கள் நெல்லை மாவட்டத்தின் தொடக்கக் கல்வி வட்டாரத்தினர்.

ANBUMANI ASKS TO CANCEL TET

சமூக நீதிக்கு எதிரான ஆசிரியர் தகுதித் தேர்வை கைவிட வேண்டும்! அன்புமணி இராமதாசு அறிக்கை!
பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கான தகுதித் தேர்வுகள் வரும் ஆகஸ்ட் மாதம் 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது. இத்தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 17-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படவுள்ளன.

 தமிழகத்தில் ஏற்கனவே இரண்டு முறை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் சராசரியாக ஒன்றரை விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தத் தேர்வுகளுக்கான விதிமுறைகள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக அமைந்திருப்பதும்,தேர்வுக்கான பாடத்திட்டம் யதார்த்தத்தை பிரதிபலிக்கும் வகையில் இல்லாமல்,சிறப்புப் பயிற்சிநிறுவனங்களில் படித்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என்ற நிலையில் வடிவமைக்கப் பட்டிருப்பதும் தான் இதற்குக் காரணம் ஆகும்.

 ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வுகள் நடத்தப்படும்போது, அதில் தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்கள் ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது தான் சமூக நீதியாகும். அண்டை மாநிலமான ஆந்திராவில் இத்தகைய ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்களாக பொதுப்பிரிவினருக்கு 60%, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50%, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 40% என நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. தமிழகத்தில் கல்லூரி பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் மூலம் நடத்தப்படும் ‘செட்’ தகுதித் தேர்வில் வெற்றி பெற பொதுப் பிரிவினர் 40% மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற நிலையில், மற்ற பிரிவினர் 35% மதிப்பெண் எடுத்தால்போதுமானது என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
 ஆனால், இந்த நியதிக்கு எதிராகஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித் தேர்வில் வெற்றி பெற அனைத்துப் பிரிவினரும் 60% மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை மாற்றி ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப்பிரிவினருக்கும் தனித்தனி தகுதி மதிப்பெண்களை நிர்ணயிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தமிழக சட்டப்பேரவையிலும் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தின. ஆனால், அதையெல்லாம் மதிக்காத தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்க மறுத்து, அனைத்து பிரிவினருக்கும் ஒரே தகுதி மதிப்பெண்களை நிர்ணயித்திருப்பது கடுமையாக கண்டிக்கத் தக்கது. இது சமூக நீதிக்கு எதிரானது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் தான் திறமையான ஆசிரியர்களாக திகழ முடியும் என்ற எண்ணமே தவறானதாகும். நகர்ப்புறங்களில் காளான்களைப் போல முளைக்கும் சிறப்புப் பயிற்சி நிறுவனங்களில் படித்தால் மட்டுமே ஆசிரியர்களாக முடியும் என்ற நிலையைத் தான் இது ஏற்படுத்தும். இதனால், கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு ஆசிரியர் பணி என்பதே காணல் நீராகிவிடும். தகுதித் தேர்வின் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்வதைவிட, பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ஓராண்டிற்கு சிறப்பான முறையில் பயிற்சி அளிப்பதன் மூலமும், இன்றைய சூழலுக்கு ஏற்ற வகையில் ஆசிரியர் படிப்புக்கான பாடத் திட்டத்தை மேம்படுத்துவதன் மூலமும் தலைசிறந்த ஆசிரியர்களை உருவாக்க முடியும். எனவே, சமூக நீதிக்கு எதிரான ஆசிரியர் தகுதித் தேர்வு முறையை ரத்து செய்து விட்டு, ஏற்கனவே இருந்தவாறு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் ஆசிரியர்களை பணியமர்த்தும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

BALAJI KEY PERSON FOR CHENNAI DISTRICT S.S.L.C. RESULTS

சென்னை தேர்ச்சி விகிதம் 94.61%... வெற்றியின் பின்னணியில் சிறப்புப் பயிற்றுனர் பாலாஜி!
Posted Date : 16:05 (31/05/2013)Last updated : 16:05 (31/05/2013)
பத்தாம் வகுப்புத் தேர்வில் வியத்தகு சாதனைகளில் ஒன்றாக, சென்னை வருவாய் மாவட்டம் 94.61 சதவீத தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளது. 

அதுமட்டுமல்ல... சென்னைப் பள்ளிகளில் ஒன்றிரெண்டு பள்ளிகளே நூறு சதவீத தேர்ச்சி பெறுவது அசாதாரணம் என்ற நிலையில், இப்போது 15 பள்ளிகள் சென்டம் சாதித்திருப்பதும் புதிய வரலாறு.

கடந்த 20 ஆண்டுகால பள்ளிக் கல்வி வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க சாதனையாகக் கருதப்படுகிறது, இதன் பின்னணியில் சென்னை மேயர் சைதை துரைசாமியும், சிறப்புப் பயிற்றுனர் எஸ்.பாலாஜியும் இருந்திருக்கிறார். 

மதுரையில் தாசில்தாராக இருந்த பாலாஜி, கடந்த 20 ஆண்டுகளாக கல்விச்சேவையாற்றி வருகிறார். ஏழைக் குழந்தைகளுக்காக கல்வி அமைப்புகள் மூலம் நல்ல கல்வியைப் பெற வழிவகுத்துள்ளார். அவரது உறுதுணையுடன் கல்வி பெற்ற ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்கள் இன்று நல்ல நிலையில் உள்ளனர். 

தாசில்தார் பாலாஜி பற்றி கேட்டறிந்த சென்னை மேயர் சைதை துரைசாமி, அவரை சென்னைக்கு அழைத்துவரும் முயற்சியில் இறங்கினார். பாலாஜியை ஓர் ஆண்டு ஆன் டெபுட்டேஷனில் சென்னையில் சிறப்புப் பயிற்றுனராக நியமிக்க நடவடிக்கை எடுத்தார். 

கடந்த ஆண்டு ஜூலையில் சிறப்புப் பயிற்றுனராகப் பொறுப்பேற்ற தாசில்தார் பாலாஜி, சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சிப் பள்ளிகளிலும் கற்பித்தலில் அதிரடி மாற்றங்களையும், புதிய உத்திகளையும் கொண்டுவந்தார். 

அதன்படி, அரசு மாநகாரட்சிப் பள்ளிகளில் கற்றல் திறன் மிகுந்த 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும், மெதுவாகக் கற்கும் மாணவர்களுக்கும் தனித்தனியாக சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டன. 

அரசு அளித்த ஒரு காரை எடுத்துக்கொண்டு காலை 7 மணிக்கு கெஸ்ட் ஹவுஸில் இருந்து புறப்படும் பாலாஜி, அனைத்துப் பள்ளிகளுக்கும் சென்று மாலை 6 மணிக்குத் திரும்புவார். தினமும் சில பள்ளிகளில் தானே சிறப்பு வகுப்புகளை நடத்துவார். ஆசிரியர்களுக்கு கற்பித்தல் உத்திகளைச் சொல்லித் தருவதுடன், அவர்களைப் பின்னால் அமரவைத்துவிட்டு, தானே பாடங்களை நடத்தி, எப்படி நடத்த வேண்டும் என்பதை நேரடியாகச் சொல்லித் தருவார். 

மெதுவாகக் கற்கும் மாணவர்களுக்காக 15 பக்கங்கள் கொண்ட கையேடு ஒன்றை இவர் உருவாக்கினார். அதுவே மாணவர்களின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. 

மாநகராட்சிப் பள்ளி மட்டுமின்றி, தனியார் பள்ளிகளும் பாலாஜி உருவாக்கியக்  கையேட்டை மாணவர்கள் பயன்படுத்த வைத்ததால், அவர்களாலும் நல்ல ரிசல்ட் கொடுக்க முடிந்திருக்கிறது. 

தற்போது மீண்டும் மதுரையில் பணியைத் தொடர்ந்துள்ள பாலாஜியிடம், சென்னைப் பள்ளிகளின் இந்தச் சாதனையில் அங்கம் வகித்தது குறித்து கேட்டபோது, "சென்னையில் ஓராண்டு காலம் சிறப்புப் பயிற்றுனாராகச் சிறப்பாக செயல்பட்டதற்கு சென்னை மேயரின் ஊக்கமும் ஆதரவும் மிக முக்கியக் காரணம்.   

சமச்சீர் கல்வி தொடங்கி ஓராண்டுதான் ஆனதால், சிறப்பு புக்லெட் ஒன்றை மாணவர்களுக்காக உருவாக்கினேன். ஓராண்டுக்கான கேள்வித் தாள்கள் மட்டுமே கொண்டு கையேடு உருவாக்க முடியாது. எனவே, அனைத்துப் பாடங்களையும் முழுமையாக உள்வாங்கி, முக்கியக் கேள்விகளையும், அதற்கு எளிதாக விடையளிக்கும் வழிமுறைகளையும் சேர்த்தேன். அதனை சென்னைப் பள்ளிகளின் மாணவர்கள் பயன்படுத்தினர். அதுவே, தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற துணைபுரிந்தது. 

சென்னை மாணவர்களின் ஆர்வம் என்னை வியக்கவைத்தது. சனி, ஞாயிறுகளில் என் கெஸ்ட் ஹவுஸுக்கே பலர் வந்துவிடுவார்கள். சிறப்பு வகுப்புகளுக்குத் தவறாமல் கலந்துகொள்வார்கள். ஆசிரியர்களும் நல்ல ஒத்துழைப்புத் தந்தனர். இந்தக் கூட்டு முயற்சியால்தான் இத்தகைய வெற்றி சாத்தியமானது. 

சென்னை மாணவர்கள் பலரும் திணரும் கணிதம், ஆங்கிலம் பாடங்களில் சிறப்பு கவனம் செலுத்தினேன். ஆங்கிலத்துக்கு 7 மணி நேரம் பேசி, ஒரு சிடியை உருவாக்கினேன். அதை அனைத்துப் பள்ளிகளுக்கு மேயர் கொண்டு சேர்த்தார். அதன்மூலம் ஆசிரியர்கள் எளிய முறையில் பாடங்களை நடத்தி, மாணவர்கள் புரிந்து படிப்பதற்கு உதவியாக இருந்தது. 

ஒரு நிகழ்ச்சியில் சென்னைப் பள்ளி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். அதில், என்னைப் பற்றி ஃபீட்பேக் தெரிந்துகொள்வதற்காக, மாணவர்களைக் கருத்துகூறச் சொன்னார் மேயர். அப்போது, பல மாணவர்கள் எழுந்து உற்சாகமாகப் பேசத் தொடங்கினர். நம் மாணவர்கள் அப்படி பேசுவார்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு பயங்கர ஆச்சரியம். அதில் ஒரு ஸ்டூடன்ட் ஸ்டேட் லெவல் மார்க் எடுப்பேன் என்று சொன்னார். அந்த மாணவர் இப்போது 491 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்ற செய்தி கேட்டபோது, என் பணியியில் நிறைவு அடைகிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் பாலாஜி.

S.S.L.C RESULTS DISTRICT WISE

10 ரிசல்ட் : மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. இதில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதத்தில், கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்தையும், தூத்துக்குடி மாவட்டம் இரண்டாம் இடத்தையும், ஈரோடு மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் வருமாறு..
வருவாய் மாவட்ட எண் - மாவட்டம் - தேர்வு எழுதியவர்கள் - தேர்ச்சி பெற்றவர்கள் - தேர்ச்சி சதவீதம் - மொத்த பள்ளிகள்:
01 - கன்னியாகுமரி - 27725 - 26974 - 97.29 - 384
03 - தூத்துக்குடி - 24450 - 23330 - 95.42 - 273
13 - ஈரோடு - 31040 - 29601 - 95.36 - 329
22 - திருச்சி - 38926 - 37036 - 95.14 - 391
06 - விருதுநகர் - 27891 - 26519 - 95.08 - 325


33 - சென்னை - 58491 - 55338 - 94.61 - 591
26 - புதுச்சேரி - 18557 - 17528 - 94.45 - 266
12 - கோயமுத்தூர் - 45859 - 43164 - 94.12 - 496
08 - மதுரை - 44765 - 41828 - 93.44 - 438
15 - நாமக்கல் - 26418 - 24627 - 93.22 - 290
11 - திருப்பூர் - 29023 - 27011 - 93.07 - 295


02 - திருநெல்வேலி - 44918 - 41713 - 92.86 - 438
05 - சிவகங்கை - 20844 - 19327 - 92.72 - 253
19 - கரூர் - 14003 - 12704 - 90.72 - 176
21 - பெரம்பலூர் - 9275 - 8383 - 90.38 - 121
04 - ராமநாதபுரம் - 19578 - 17675 - 90.28 - 225
07 - தேனி - 19218 - 17264 - 89.83 - 181
10 - உதகமண்டலம் - 10749 - 9654 - 89.81 - 173
14 - சேலம் - 49610 - 44116 - 88.93 - 464


25 - தஞ்சாவூர் - 38181 - 33895 - 88.77 - 389
16 - கிருஷ்ணகிரி - 28070 - 24876 - 88.62 - 348
09 - திண்டுக்கல் - 30705 - 27190 - 88.55 - 308
31 - காஞ்சிபுரம் - 55045 - 47813 - 86.86 - 562
32 - திருவள்ளூர் - 51282 - 44539 - 86.85 - 575
18 - புதுக்கோட்டை - 23631 - 20261 - 85.74 - 286
17 - தர்மபுரி - 25333 - 21663 - 85.51 - 279


24 - திருவாரூர் - 19286 - 16035 - 83.14 - 197
30 - வேலூர் - 57171 - 47501 - 83.09 - 559
20 - அரியலூர் - 11841 - 9758 - 82.41 - 149
27 - விழுப்புரம் - 48081 - 39424 - 81.99 - 518
23 - நாகப்பட்டினம் - 26325 - 20935 - 79.53 - 258
29 - திருவண்ணாமலை - 34507 - 27225 - 78.9 - 441
28 - கடலூர் - 40220 - 30264 - 75.25 - 372

Wednesday, May 29, 2013

GREETINGS FOR TAKING PART IN 10TH WORLD TAMIL TEACHERS CONFERENCE


PROCEEDINGS FOR RELIEVING THE TEACHERS WHO WENT ON TRANSFER



LAST DATE EXTENDED TILL JUNE 13 FOR ADMITTING 25% POOR STUDENTS IN PRIVATE SCHOOLS

    தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்கள் சேர்க்கை: ஜூன் 13 வரை காலக்கெடு நீட்டிப்பு
    Posted Date : 12:05 (29/05/2013)Last updated : 13:05 (29/05/2013)
    தனியார் சுயநிதி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவர்களை சேர்ப்பதற்கான இறுதி தேதியை 2 வாரங்களுக்கு நீட்டித்து மெட்ரிக்குலேஷன் இயக்குனரகம் அறிவித்துள்ளது.

    மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் சுயநிதி பள்ளிகள் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் ஆரம்ப வகுப்புக்களில் 25 சதவீதம் இடங்களில் ஏழை மாணவர்களை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

    இதையடுத்து கடந்த மே மாதம் 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை இதற்கான விண்ணப்பங்களை பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று மெட்ரிக்குலேஷன் கல்வி இயக்குனரகம் அறிவித்தது. ஆனால் பெரும்பாலான பள்ளிகள், 25 சதவீதம் இடங்களில் ஏழை மாணவர்களை சேர்த்தால் நன்கொடை கிடைக்காது, மேலும் அரசு நிர்ணயித்த குறைந்த கல்வி கட்டணமே கிடைக்கும் என்று ஏழை மாணவர்களுக்கு விண்ணப்பங்களை தராமல் இழுத்தடித்தன.

    மே மாதம் 9ஆம் தேதிக்கு பிறகு பள்ளிக்கு சென்ற பெற்றோர்களிடம் இறுதி தேதி முடிந்து விட்டது என்று காரணம் சொல்லி தனியார் பள்ளிகள் திருப்பி அனுப்பின. இதனால் பல தனியார் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்படாமலே இருந்தன. தனியார் பள்ளிகளின் இந்த மோசடி நாடகத்தை எதிர்த்து கல்வியாளர்கள் குரல் கொடுத்தனர்.

    இதை தொடர்ந்து மெட்ரிக்குலேசன் கல்வி இயக்குனரகம் இன்று அதிரடியாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், சிறுபான்மை அல்லாத தனியார் சுயநிதி மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் ஆரம்ப நிலை வகுப்புகளில் 25 சதவீதம் இடங்களை ஏழை மாணவர்களை சேர்க்க வேண்டும். குறிப்பாக ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கு குறைவாக உள்ள பெற்றோரின் குழந்தைகளை பள்ளிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

    ஆனால் பெரும்பாலான இடங்களில் பெற்றோர்களுக்கு விண்ணப்பங்கள் சரிவர கிடைக்கவில்லை. எனவே தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவர்களை சேர்ப்பதற்கான காலக்கெடு ஜூன் மாதம் 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெற்று தகுதியுடைய பெற்றோர்கள் அங்கேயே விண்ணப்பிக்கலாம்.

    முதன்மை கல்வி அலுவலர் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியுடைய குழந்தைகளை தனியார் சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


GREETINGS TO M.LAKSHMINARAYANAN

வாழ்த்துகிறோம்

மலேசியாவில் நடைபெறும் 10 வது உலகத்தமிழாசிரியர் மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை மாவட்டச்செயலாளர் 
திரு.மு.லெட்சுமி நாராயணன்
 அவர்களை வாழ்த்துகிறோம்

இவண்
தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  
நாகப்பட்டினம் நகர மற்றும் வட்டாரக்கிளை
 

SCHOOL VACATION EXTENDED ELEMENTARY ORDER


PRO-TAMIL ACTIVISTS AGAINST ENGLISH MEDIUM SECTIONS

அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகள் தொடங்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் தமிழ் அமைப்புகள் சார்பில் நடைபெற்றது

சென்னை
அரசு பள்ளிகளில், ஆங்கிலவழி வகுப்புகள் தொடங்குவதை கண்டித்து சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கண்டன ஆர்ப்பாட்டம்
2013–2014–ம் கல்வி ஆண்டில் இருந்து தமிழக அரசின் 3,200 தொடக்கப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் முதல் வகுப்பிலும், 6–ம் வகுப்பிலும் ஆங்கிலமொழியை பயிற்றுமொழியாகக் கொண்ட வகுப்புகள் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த நிலையில், அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகள் தொடங்கும் திட்டத்தை கைவிடக்கோரி தமிழ்வழிக்கல்வி கூட்டு இயக்கம் அமைப்பு சார்பில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்கள் அமைந்துள்ள சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ் அமைப்புகள் பங்கேற்பு
இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள தமிழ்த்தேச பொதுவுடைமை கட்சி தலைவர் பெ.மணியரசன், திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் விடுதலை ராஜேந்திரன், தபசிகுமரன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு, தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி சைதை சிவா, தமிழ்த்தேச மக்கள் கட்சி நிர்வாகி தமிழ்நேயன், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, விடுதலை தமிழ்ப்புலிகள் அமைப்பின் நிர்வாகி குடந்தை அரசன், தமிழர் எழுச்சி இயக்க நிர்வாகி ப.வேலுமணி, தலைநகர் தமிழ்ச்சங்க நிர்வாகி த.சுந்தரராஜன், சேவ் தமிழ் இயக்கத்தின் செந்தில் உள்பட சுமார் 200 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஒன்றாம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும், அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும், மருத்துவம், என்ஜினீயரிங், விவசாயம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில், தமிழ்வழியில் படித்தோருக்கு முன்னுரிமை தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகள் தொடங்குவதை கைவிடக்கோரியும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.
சாலை மறியல்
போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, ஒருசிலர் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். தமிழ் அமைப்புகளின் ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு, டி.பி.ஐ. வளாகத்தில் திருவல்லிக்கேணி போலீஸ் துணை கமிஷனர் அனில் கிரி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. டி.பி.ஐ. வளாகத்தின் அனைத்து நுழைவுவாயில்களிலும் ஏராளமான போலீசார் குவிக்குப்பட்டு இருந்தனர். போலீஸ் வாகனங்களும் தயார்நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன.

SCHOOL REOPENING POSTPONED

அனைத்து பள்ளிகளும் ஜூன் 10ல் திறப்பு

கருத்துகள்
மாற்றம் செய்த நேரம்:5/29/2013 6:35:52 AM


 கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை ஜூன் 10ம் தேதி திறக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் பள்ளிகளுக்கு கூடுதலாக ஒரு வாரம் கோடை விடுமுறை கிடைத்துள்ளது.ஏப்ரல் 30ம் தேதியுடன் பள்ளிகள் முடிந்து கடந்த 1ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுமுறை முடிந்து  ஜூன் 3ம் தேதி அனைத்து பள்ளிகளையும் திறக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. மே மாதம் முழுவதும் அக்னி நட்சத்திரம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் கடுமையான வெப்பம் நிலவியது. குறிப்பாக மதுரை, திருச்சி, வேலூர், சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் உச்சத்தை தொட்டது. அதிலும், திருச்சியில் 109.4 டிகிரி வெப்பம் நிலவியது. கடந்த 117 ஆண்டுகளில் தமிழகத்தில் இந்த அளவுக்கு வெப்பம் பதிவானதில்லை. 


பருவமழை பொய்த்துப்போனதால் வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.கடலில் இருந்து தரைப்பகுதி நோக்கி வீசும் குளிர் காற்று வீசாததால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெப்ப காற்று வீசி வருகிறது. இதனால் பள்ளிகளை திறக்கும் தேதியை ஒத்திவைப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வந்தது.புதுச்சேரி அரசு பள்ளிகள் திறக்கும் தேதியை ஜூன் 10ம் தேதி என்று நேற்று முன்தினம் அறிவித்து விட்டது. இந்நிலையில் தமிழக அரசு நேற்று தனது அறிவிப்பை வெளியிட்டது. அதில் கடுமையான வெயில் மற்றும் வெப்ப காற்று காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.இதையடுத்து மாணவர்களுக்கு 7 நாட்கள் கூடுதலாக விடுமுறை கிடைத்துள்ளது
.

ஜூன் 10-ல் பள்ளிகள் திறப்பு

First Published : 29 May 2013 01:36 AM IST
அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 3-ஆம் தேதிக்குப் பதிலாக, ஜூன் 10-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
2013-14- ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் ஜூன் 3-ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவுவதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறக்கும் தேதியை ஒரு வாரம் தள்ளிவைக்க அரசு ஆணையிட்டது.
அதன்படி அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 3-ஆம் தேதிக்குப் பதிலாக ஜூன் 10-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
இந்த விடுமுறையால் வெறும் 5 வேலை நாள்கள் மட்டுமே இழப்பு ஏற்படும் என்பதால் இது வரும் கல்வியாண்டை எந்த விதத்திலும் பாதிக்காது என பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் கடுமை நீடிப்பதால் பள்ளிகள் திறப்பது ஒரு வாரம் தள்ளிவைப்பு: ஜூன் 10–ந் தேதி திறக்கப்படும் என்று அறிவிப்பு

சென்னை
ஒவ்வொரு ஆண்டும், பள்ளி இறுதி தேர்வுகள் முடிவடைந்ததும் மாணவ–மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுவது வழக்கம்.
கோடை விடுமுறை
மேல்நிலைப்பள்ளிகளில் ஏப்ரல், மே இரு மாதங்களும், ஆரம்பப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மே மாதமும் விடுமுறை இருக்கும். அந்த வகையில், இந்த ஆண்டும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களும், தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மே மாதம் 1–ந் தேதி முதலும் கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிவடைந்து, அனைத்து பள்ளிகளும் ஜூன் மாதம் 3–ந் தேதி (திங்கட்கிழமை) திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
வெயில் கொடுமை
இந்த ஆண்டு கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்னதாகவே, கோடை வெயில் வறுத்தெடுக்க தொடங்கிவிட்டது. சென்னை, வேலூர், திருச்சி, மதுரை, சேலம், தூத்துக்குடி, திருநெல்வேலி என மாநிலம் முழுவதுமே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. கத்திரி வெயில் இந்த மாதம் 4–ந் தேதி தொடங்கியதுதான் தாமதம். வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.
வேலூர், திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் சர்வ சாதாரணமாக வெயில் 110 டிகிரியை தாண்டியது. சென்னையில் 108 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்த நிலையில், கத்திரி வெயில் நேற்று முடிவடைந்தது. எனினும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. வேலூரில் 105 டிகிரியும், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் தலா 104 டிகிரியும், கடலூரில் 103 டிகிரியும், கரூரில் 102 டிகிரியும், சென்னையில் 100 டிகிரியும் வெயில் பதிவானது.
மாணவ–மாணவிகள் மும்முரம்
இதற்கிடையே, கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் ஜூன் மாதம் 3–ந் தேதி திறக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால் விடுமுறையை கழிப்பதற்காக வெளியூர்களில் உள்ள உறவினர் வீடுகளுக்கு சென்ற மாணவ–மாணவிகள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். பொதுவாக, கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளி திறக்கும் நாளன்று மாணவ–மாணவிகள் அனைவரும் புதிய வகுப்புகளுக்கு புத்தாடை அணிந்து செல்வது வழக்கம். அதன்படி, கடைகளுக்கு சென்று புதிய ஆடைகளை வாங்கி வருகின்றனர்.
பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றம்
இந்த சூழ்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், பள்ளிகள் திறக்கும் தேதி சற்று தள்ளிவைக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. கடும் வெயிலை கருத்தில் கொண்டு, மாணவர்கள் நலன் கருதி முன்பு பல ஆண்டுகளில் பள்ளி திறக்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. அதனால், இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பது தாமதமாகலாம் என்று மாணவ–மாணவிகளும், ஆசிரியர்களும் எதிர்பார்த்தனர். அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் வகையில், பள்ளிகள் திறக்கப்படும் தேதி ஒருவாரம் தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் கே.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
ஜூன் 10–ந் தேதி திறப்பு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் 2013–2014–ம் கல்வி ஆண்டில் ஜூன் மாதம் 3–ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, தமிழகத்தில் கடுமையான வெப்பநிலை தொடர்வதால், மாணவ–மாணவிகளின் நலன் கருதி, அனைத்து பள்ளிகளும் ஜூன் 3–ந் தேதிக்கு பதிலாக, ஜூன் 10–ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கும் என தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இவ்வாறு தேவராஜன் கூறி உள்ளார்.
பள்ளிக்கல்வி இயக்குனரின் உத்தரவை தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்பப்பள்ளிகளும், நடுநிலைப்பள்ளிகளும், உயர்நிலைப்பள்ளிகளும், மேல்நிலைப்பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 10–ந் தேதி திறக்கப்படும். அரசு பள்ளிகள் மட்டுமின்றி, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

PROBLEM IN EXECUTING NEW MENU IN NUTRITION MEALS

சத்துணவு மானிய உயர்வில் அதிருப்தி பள்ளிகளில் கலவை சாதம் திட்டம் செயல்படுத்துவதில் திடீர் சிக்கல்

கருத்துகள்


சிவகங்கை: சத்துணவில் உணவு மானியத் தொகையை உயர்த்தியதில் ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளதால், 13 வகையான கலவை சாதம் திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பள்ளி சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களில் 2013-14 கல்வியாண்டு முதல் 13 வகையான கலவை சாதம், முட்டை மசாலா வழங்கும் திட்டம் துவங்கப்பட உள்ளது. முன்னோட்டமாக மாவட்டத்துக்கு ஒரு ஒன்றியத்தில் செயல்படுத்தப்பட்டது. அப்போது ஒரு மாணவருக்கு கூடுதலாக ரூ.7 வரை செலவானது. இதையடுத்து சத்துணவுக்கு ஒதுக்கப்படும் உணவு மானியத்தை உயர்த்த ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், உணவு மானியத்தை தமிழக அரசு இரண்டு விதமாக உயர்த்தியுள்ளது. பருப்பு பயன்படுத்தப்படும் நாட்களில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் ஒரு குழந்தைக்கு காய்கறிக்கு 70 பைசா, மளிகைக்கு 20 பைசா, எரிபொருளுக்கு 40 பைசா என மொத்தம் ரூ.1.30 ஒதுக்கப்பட்டுள்ளது. 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் ஒரு மாணவருக்கு காய்கறிக்கு 80 பைசா, மளிகைக்கு 20 பைசா, எரிபொருளுக்கு 40 பைசா என மொத்தம் ரூ.1.40 ஒதுக்கப்பட்டுள்ளது. பருப்பு பயன்படுத்தப்படாத நாட்களில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் ஒரு குழந்தைக்கு காய்கறிக்கு 82 பைசா, மளிகைக்கு 40 பைசா, எரிபொருளுக்கு 48 பைசா என மொத்தம் ரூ.1.70 ஒதுக்கப்பட்டுள்ளது. 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் ஒரு மாணவருக்கு காய்கறிக்கு 92 பைசா, மளிகைக்கு 40 பைசா, எரிபொருளுக்கு 48 பைசா என மொத்தம் ரூ.1.80 ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அங்கன்வாடி மையங்களில் பருப்பு பயன்படுத்தப்படும் நாட்களில் 2 முதல் 5வயது வரையுள்ள ஒரு குழந்தைக்கு காய்கறிக்கு 70 பைசா, மளிகைக்கு 24 பைசா, எரிபொருளுக்கு 19 பைசா என மொத்தம் ரூ.1.13, பருப்பு பயன்படுத்தாத நாட்களில் காய்கறிக்கு 80 பைசா, மளிகைக்கு 36 பைசா, எரிபொருளுக்கு 19 பைசா என மொத்தம் ரூ.1.35 ஒதுக்கப்பட்டுள்ளது.உயர்த்தப்பட்ட உணவு மானியம் குறைவாக உள்ளதால் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் 13 வகையான கலவை சாதம் வழங்கும் திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சத்துணவு ஊழியர் சங்க தலைவர் சங்கரநாராயணன் கூறுகையில், ‘விலைவாசி உயர்வால் 13 வகை கலவை சாதம், முட்டை மசாலா திட்டத்தில் பீன்ஸ், காரட், தக்காளி, வெங்காயம், மிளகு போன்ற பொருட்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. இதனால் ஒரு மாணவருக்கு குறைந்தது ரூ.7வரை செலவாகும். ஆனால் மிக குறைவான தொகை மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 100 மாணவருக்கு தினந்தோறும் ரூ.500 வரை ஊழியர்களுக்கு கூடுதல் செலவாகும். இதனால் இத்திட்டத்தை சரியாக செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே உணவு மானியத்தை குறைந்தது ரூ.5 ஆக உயர்த்த வேண்டும்’ என்றார்.

SCHOOL REOPENING POSTPONEMENT ORDER


Tuesday, May 28, 2013

TAMILNADU SCHOOLS' VACATION EXTENDED UPTO JUNE 10

ஜூன் 10ம் தேதி தான் பள்ளிகள் திறப்பு : தமிழக கல்வித் துறை அறிவிப்பு

கருத்துகள்


தமிழகத்தில் பள்ளிகளின் கோடை விடுமுறையை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டித்து தமிழக கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூன் 3ம் தேதிக்கு பதில் ஜூன் 10ம் தேதியன்று தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெப்பத்தின் கடுமை தொடர்வதால் விடுமுறை நீட்டிக்கப்படுவதாக கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. 
தமிழகத்தில் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: தமிழக அரசு
தமிழகத்தில் வரும் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 3 ம்தேதி துவங்குவதாக இருந்தது. தற்போது அதற்கு பதிலாக வரும் ஜூன் 10ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறப்பு: தமிழக அரசு

First Published : 28 May 2013 03:35 PM IST
தமிழகத்தில் வரும் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 3 ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதற்கு பதிலாக வரும் ஜூன் 10ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

AMOUNT SANCTIONED FOR 9 AEEO OFFICES FOR OWN BUILDING



ASSISTANT TO DESK SUPERINTENDENT PANEL IN EDUCATION DEPARTMENT

ASSISTANT TO DESK SUPERINTENDENT PANEL IN EDUCATION DEPARTMENT

TO DOWNLOAD THE ABOVE PANEL DOUBLE CLICK HERE 

COLLEGE STUDENTS CAN WRITE THEIR EXAMS IN TAMIL -CM

கல்லூரி மாணவர்கள் உள் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்: முதல்வர் ஜெ., அறிவிப்பு
கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், உள்தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் "மாணவ, மாணவியர், ஆங்கில மொழி தொடர்பு திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும், இதனால், அதிக வேலை வாய்ப்புகளை பெற முடியும்' என, நூதனமாக ஒரு காரணத்தைக் கூறி, வரும் கல்வி ஆண்டில் இருந்து, அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும், "அசைன்மென்ட்' மற்றும் தேர்வுகளை, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையில், இந்த உத்தரவை, தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, வரும் ஜூன் முதல், கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள், "அசைன்மென்ட்' மற்றும் தேர்வுகளை, தமிழில் எழுதக் கூடாது; ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும். அரசின் உத்தரவை அடுத்து, இது குறித்த அறிவிப்புகள், கல்லூரிகளில் வெளியிடப்பட்டு உள்ளன.மாணவ, மாணவியரின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு, இந்த நடவடிக்கையை எடுத்தாலும், இது, மாணவர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில், எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த முடிவுக்கு அரசு தரப்பிலும், கல்வியாளர்கள் தரப்பிலும், புதிய முடிவு வரவேற்கப்பட்டாலும், கல்லூரி ஆசிரியர்கள் தரப்பிலும், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தரப்பிலும், எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. அரசின் முடிவால், தோல்வி அடையும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்வதுடன், படிப்பை பாதியில் விடும் மாணவர்கள் எண்ணிக்கையும் உயரும் என, ஆசிரியர் சங்கங்கள் கூறுகின்றன.

இதற்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தலைமைச்செயலகத்தில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் உள்தேர்வுகளை தமிழ் அல்லது ஆங்கிலத்திலும் எழுதலாம். தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், தங்களது தேர்வை ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் தங்கள் விருப்பப்படி, தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தேர்வுகளை எழுதலாம். ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்ற உயர்கல்வி மன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. உயர்கல்வி மன்றத்தின் ஆணை தமது கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை என கூறியுள்ளார்

JUNIOR VIKATAN ABOUT ENGLISH MEDIUM SECTIONS


Monday, May 27, 2013

AN OPEN LETTER TO A TEACHER FROM A PRIVATE SCHOOL STUDENT

பெறுநர்: ஆசிரியர்கள்... அனுப்புநர்: தனியார் பள்ளி மாணவன்
Posted Date : 09:05 (15/05/2013)Last updated : 09:05 (15/05/2013)
மதிப்புக்குரிய ஆசிரியர்களுக்கு,
நான் இப்போது பனிரெண்டாம் வகுப்பு செல்லும் மாணவன். உங்கள் மொழியில் என்னைப்பற்றி குறிப்பிடவேண்டும் என்றால், 'நன்கு படிக்கும் மாணவன்'.

உங்களுக்காக எழுதும் இந்தக் கடிதம், ஏதோ ஒரு காலக்கட்டத்தில், ஏதோ ஒரு சூழலில் உங்களுக்குக் கிடைக்கும் என நம்புகிறேன். இதை ஒரு இ-மெயில் கடிதமாகக் கருதினால், கல்வி அமைச்சருக்கு CC; பெற்றோர்களுக்கு BCC இட்டிருப்பதாகக் கருதிக்கொள்ளுங்கள். 

நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன். இது, என் கதை மட்டும் அல்ல; பள்ளியில் படிக்கும் பல மாணவர்களின் அனுபவம்.


நான் சிறுவயதில் மாற்றுமுறை பாடத்திடம் உள்ள  பள்ளியில் சந்தோஷமாக இருந்தவன். அங்கு ஐந்தாம் வகுப்பு வரை மட்டும் இருந்ததால், வழக்கமான தனியார் பள்ளிகளுள் ஒன்றில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தேன். 
புதிய பள்ளியில் சில மாதங்கள் நகரமாகக் கழிந்தது. அங்கு அட்ஜஸ்ட் செய்துகொள்ளவே முடியவில்லை. பிறகு, இதுதான் 'பள்ளி' என்று உணர்ந்து பழகிக் கொண்டேன்.


சுதந்திரமாக பாடம் கற்று கொண்டிருந்த 
என்னை, டீச்சர்கள் அறையில் அடைத்துவைத்து எப்பவும் 'படி... படி...' என்று கூறுவது, பக்கம் பக்கமாய் வீட்டுப் பாடம் செய்யவைப்பது என்று எல்லாமே வேதனைக்குரியது ஆனது.

இவையாவது பரவாயில்லை... 40 நிமிடங்கள் அவர்களுக்குத் தெரிந்ததை கொட்டிவிட்டு போவார்கள். புரிந்ததோ, புரியவில்லையோ உட்கார்ந்து நாம் கவனமா கேட்கவேண்டும்.போர் அடித்து, அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பினால் திட்டு விழும். ஒழுக்கத்தை போதிக்கறேன் என்று எங்களை ஜெயில் கைதி போல நடத்துவார்கள்.
எங்கும் ஸ்ட்ரிக்ட்... எதை செய்தாலும் பனிஷ்மென்ட்... எங்களை கண்காணிக்க வேறு இன்னும் சிலர் சுற்றிக்கொண்டு இருப்பார்கள். யாரும் எதுவும் ஸ்கூல்ல பேசி சிரிச்சிடக்கூடாது. நண்பர்களை ஸ்கூலில் பார்க்காமல் எங்கு பார்க்க முடியும்? சக மாணவிகளிடம்கூட நட்புடன் சகஜமாகப் பேசமுடியாது. மீறிப் பேசினால், தண்டனைகூட உண்டு.

ஆசிரியர்கள்  மாணவர்களை மூன்று வகையாகப் பிரித்து வைத்திருப்பார்கள். மிக நன்கு படிப்பவர்கள், ஆவரேஜ், மந்தமானவர்கள். முதல் மற்றும் மூன்றாம் வகையினர் பத்து சதவிகிதம் இருப்பார்கள். மீதி உள்ள எல்லாரும் சராசரியில் வருவார்கள். 

கடைசியாக வரும் பத்து சதவிகித மாணவர்களை 'டேக்' செய்து, முத்திரைக் குத்தி இந்த ஆசிரியர்கள் படுத்தும் பாடு இருகிறதே... சொல்ல முடியாத அளவுக்கு மாணவர்கள் வேதனைப்படுவார்கள்! வீட்டிலும் சொல்ல முடியாமல் மனதுக்குள் புழுங்கி ஒரு வித தாழ்வு மனப்பான்மை வந்து விடும். அப்படி ஒரு நெருக்கடியில் சிக்கி, மிகத் திறமையான மாணவர்கள்கூட வீணாக போய்விட்டதை பார்த்து இருக்கிறேன்.

ஒரு சில ஆசிரியர்களைத் தவிர, அனைவருமே மார்க்கை வைத்துதான் மாணவர்களை எடை போடுகிறார்கள். குறைந்த மார்க் வாங்கும் மாணவர்களை, 'ஒன்றுக்கும் லாயக்கு இல்லை' என்று அடிக்கடி திட்டி, மட்டம் செய்து, நிஜமாக அவர்களை மோசமான நிலையை எட்ட செய்து விடுகிறார்கள். அதனால, அவர்களில் சிலர் கெட்டப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாவதும் நடக்கிறது.

ஆசிரியர்கள் நினைத்தால் எங்களை உற்சாகப்படுத்தி, எந்த உயரத்துக்கும் கொண்டு செல்ல முடியும். ஆனால், அவர்களுக்கு நிறைய மார்க் எடுக்கும் டாப் 10 சதவிகிதம்தான் முக்கியம். மற்றவர்கள் முக்கியம் இல்லை. மிகுந்த பாரபட்சம். ஒரு மாணவனுக்கு ஒரு பாடம் மட்டும் வரவில்லை என்றாலும், எதுவும் வராது என்று முடிவு கட்டும் பழக்கமும் உண்டு.

அப்புறம் இன்னொரு விஷயம்... அவர்களுக்கு தெரியாத எதையும் நாங்கள் கேட்டுவிட கூடாது. கேட்டால் அவ்வளவுதான். 'தெரியாது... கற்றுக்கொண்டு வருகிறேன்' என்று கூறினால், அவர்களுக்கு மரியாதை போய்விடும். சந்தேகம் கேட்டால்கூட அவர்களுக்கு தெரிந்ததை மட்டும் கேட்கவேண்டும். புரியாத, தெரியாத விஷயத்தை கேட்டாலோ, விவாதம் செய்தாலோ 'அதிகப்பிரசங்கி' என்று கூறி நம்மை அடக்கி விடுவார்கள்.

நாமாக எதுவும் செய்யக் கூடாது; கேட்கக் கூடாது. அவர்களும் புத்தகத்தை, அன்றைய தனி பாடத்தைத் தவிர வேறு எதுவும் சொல்லித்தர மாட்டார்கள். அதுவும் அவர்களுக்குப் பிடித்த மாதிரி சொல்லி கொடுத்துவிட்டு போவார்கள். நாம் புரியவில்லை என்று கூறினால், 'மக்கு' பட்டம் வந்துவிடும். பிறகு, டியூஷன் சென்று திரும்ப புரிந்துப் படிக்கணும். அப்புறம் எதற்கு எட்டு மணி நேரம் வெறும் பாடங்கள்? 

சில பள்ளிகளில் விளையாட்டு பீரியட்கள்கூட கேன்சல் செய்து பாடங்கள் எடுப்பார்கள். ஆனால், சில ஆசிரியர்கள் மட்டுமே நன்கு நடத்துவார்கள். பிறகு, பள்ளி செல்ல எங்களுக்கு எப்படி பிடிக்கும்? 

நாங்கள் இப்போது இருக்கும் தகவல் தொழில் நுட்பப் புரட்சியில் யூடியூப்பிலும், கூகிளிலும் இதை விட நன்றாகக் கற்று கொள்வோம். அப்படி இருக்கையில், எங்களை சோர்வடைய விடாமல் சுவாரசியமாக, நன்றாக கற்றுத் தருவது ஆசிரியர்களின் கடமை. ஆனால், அவர்கள் அதை உணர்ந்து கொள்வதே இல்லை. மார்க் வந்தால் போதும். அது எப்படி வந்தது என்ற கவலை இல்லை அவர்களுக்கு. புரிந்ததா, புரியவில்லையா என்ற பிரச்னை அவர்களுக்கு இல்லை.

பிறகு, பள்ளிகளும் மாணவர்களை வதைப்பதை சந்தோஷமாக செய்கின்றன. ஸ்ட்ரிக்ட் பள்ளிகள் என்று பெயர் எடுக்க, தேவை இல்லாத தண்டனைகள் எங்களுக்கு உண்டு. பெரிய வகுப்பு செல்லச் செல்ல நிறைய ஆசிரியர்களின் தரம் சொல்லி கொள்ளும்படி இல்லை. ஆனால், எங்களை அடக்குவதில் யாரும் சளைத்தவர்கள் இல்லை.

எனக்குத் தெரிந்து பள்ளியை விட்டு நின்ற, கெட்டப் பழக்கங்களுக்கு ஆளான மாணவர்கள் நிறையபேர் உள்ளனர். அதில் பெரும்பாலோர் ஆசிரியர்களின் மதிப்பீடுகளால் ஒரு வித தாழ்வு மனப்பான்மைக்கு சென்று வழி தவறி விடுகிறார்கள். மாணவர்களை நல்வழியில் ஈடுபடுத்தும் கடமையை விட்டுவிட்டு, அவர்களை மட்டம் தட்டி வழிமாறச் செய்வதில் என்ன சாதிக்க முடியும்? இது போன்ற மாணவர்களை நான் உதாரணமாக காட்ட முடியும். கண்ணால் பார்தததைதான் சொல்லுகிறேன். இதுதான் ஆசிரியர்கள் செய்யும் சாதனைகளா? 

கட்டமைப்பு, தொழில் நுட்பம், நல்ல விசாலமான அறிவு எல்லாம் இருந்தாலே இந்த காலத்து மாணவர்களின் அறிவுக்கு ஈடு கொடுக்க முடியாது. ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் இவை ஏதும் இல்லை. எங்களை சொந்தமாக ஒரு ப்ராஜக்ட்கூட செய்ய விடுவது இல்லை. அவர்கள் சொல்லுவதை கேட்டு, ஆட்டு மந்தை போல தலையாட்ட வேண்டும். எங்களை யோசிக்கவிடாமல் செய்வதில் அத்தனை சந்தோஷம்.

இப்படி இருந்தால் நாட்டுக்கு எப்படி ஆராய்ச்சியாளர்கள் கிடைப்பார்கள். எந்தத் தனித்துவமும் இல்லாத மாணவர்களை உருவாக்கி, என்ன சாதிக்கப் போகிறார்கள்? அனைவரும் நூற்றுக்கு நூறு வாங்கினால் சமுதாயம் முன்னேறிவிடுமா? இந்த ஐந்து பாடங்களில் மட்டும் வாழ்கைக்கு தேவையான அத்தனையும் கற்று கொள்ள முடியுமா? 

பதினைந்து வருடங்கள்... வாழ்கையில் முக்கியமான வருடங்களை காலையில் இருந்து சாயங்காலம் வரை பள்ளியில் செலவு செய்கிறோம். ஆனால், என்ன கற்று கொள்கிறோம் என்றால், மிக குறைவே. ஆனால், அதைவிட அதிகமாக வெளியில்தான் கற்றுகொள்கிறோம். நல்லதோ, கெட்டதோ வெளியில் கற்றுக்கொள்வதை விட செலவிடும் நேரத்தில் பள்ளியில் கற்றுக்கொள்வது மிகக் குறைவு.

எனக்குத்தான் இப்படியெல்லாம் தோன்றுகிறதோ என்று எண்ணி, இதுபற்றி என் நண்பன் ஒருவனிடம் விவாதித்தேன். அவன் வன்முறையை கையில் எடுக்கும் அளவுக்கான மனநிலையை இந்தக் கல்வி முறை போதித்து உள்ளது என்பதை உணர்ந்தேன். 

என்னைப் போன்ற பெரும்பாலான மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் 'இந்த காலத்து பிள்ளைகள்' என்று  குறைசொல்வதில் என்ன பயன்? 

கல்வி சீர்திருத்தம் தேவையான ஒன்று. அது நடக்காவிட்டால் பெரும் கலாசார சீரழிவை எதிர்நோக்க வேண்டி இருக்கும் என்று உங்களுக்கு புரிய வைக்கவே இந்தக் கடிதம். இன்னும் எத்தனையோ இருக்கு... ஒரே கடிதத்தில் அத்தனையும் கொட்ட முடியவில்லை. 

ஆசிரியர்களாகிய நீங்கள், மாணவர்களாகிய எங்கள் நிலையில் இருந்து கொஞ்சம் யோசித்துப் பார்த்து செயல்படுங்கள்.

இனி, இந்தியாவை ஒளிர வைக்கும் பங்கு யார் கையில் என்று தீர்மானம் செய்யுங்கள்!

இப்படிக்கு,
உதட்டளவில் தங்கள் கீழ்ப்படிந்த மாணவன்,
கார்த்திக்.

* மாணவர் கார்த்திக் விவரிக்க, எழுதியவர்: கிர்த்திகா