பி.எட்., படிப்பை இரண்டு ஆண்டுகளாக மாற்ற ஆய்வு: அமைச்சர் பழனியப்பன்ஆகஸ்ட் 09,2014,14:42 IST
சென்னை: "பி.எட்., படிப்பை இரண்டு ஆண்டுகளாக மாற்ற, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் ஆய்வு செய்து வருகிறது" என, உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார்.
சட்டசபை கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்:
மா.கம்யூ., பாலபாரதி: பி.எட்., கல்வி நிலையங்கள் கூடுதல் கட்டணங்களை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. அதேநேரத்தில், பி.எட்., படிப்பு ஓராண்டில் இருந்து, இரண்டு ஆண்டுகளாக மாற்றப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
அமைச்சர் பழனியப்பன்: அரசு மற்றும் தனியார் பி.எட்., கல்வி நிலையங்களுக்கு, நீதிபதி பாலசுப்ரமணியன் கமிஷன், கட்டணங்களை பரிந்துரைத்துள்ளது. அதன்படி, அரசு கல்லூரிகளுக்கு 2,050; அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு 10 ஆயிரம்; தனியார் கல்லூரிகளுக்கு 41,500; தரச்சான்று பெற்ற தனியார் கல்லூரிகளுக்கு 46 ஆயிரம் ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேல், கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில் ஓராண்டு பி.எட்., படிப்பை, இரண்டு ஆண்டுகளாக உயர்த்த, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் ஆய்வு செய்து வருகிறது. இதுவரை முடிவு வெளியாகவில்லை என்றார். இவ்வாறு விவாதம் நடந்தது.
No comments:
Post a Comment