ஊத்தங்கரை அருகே ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாள் தருவதாக கூறி, 6 லட்ச ரூபாய் மோசடி செய்த, இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான அரசு பள்ளி தலைமையாசியர் உள்ளிட்ட, மூன்று பேரை போலீஸார் தேடி வருகின்றனர். ஊத்தங்கரை அடுத்த அனுமந்தீர்த்தம் புதுப்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி, 25. இவர் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். இவர் நடந்து முடிந்த ஆசிரியர் தகுதி தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தார்.அதே ஊரை சேர்ந்தவர் வீரமணி, 35, இவரது உறவினர் கூச்சானூரை சேர்ந்த செந்தில்குமார், 40, இவர் வேலூர் மாவட்டம், காக்கங்கரை அரசு துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.வீரமணியும், செந்தில்குமாரும் சேர்ந்து ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாளை வழங்குவதாக கூறி ராமசாமியிடம் இருந்து, 6 லட்ச ரூபாய் வாங்கினர். தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன் வினாத்தாள் கொடுத்தனர். தேர்வில் அவர்கள் கொடுத்த வினாத்தாளில் இருந்து கேள்விகள் வரவில்லை. தேர்வுக்கு பின் ராமசாமி, வீரமணி, செந்தில்குமாரிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டார்."பணத்தை திருப்பி கேட்டால் கொலை செய்வோம்' என, வீரமணி, செந்தில்குமார், அவரது மனைவி யசோதா, 35, செந்தில்குமாரின் தந்தை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பழனி, 60, மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த பிரகாஷ், 36, ஆகியோர் ராமசாமியை மிரட்டினர்.ராமசாமி ஊத்தங்கரை போலீஸில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் விசாரித்து, வீரமணி , பழனி ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான தலைமை ஆசிரியர் செந்தில்குமார், அவரது மனைவி யசோதா, பிரகாஷ் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment