தலைமை ஆசிரியரை கண்டித்து கோயிலில் மாணவர்கள் தஞ்சம்

ஆலங்குளம்: நெல்லை மாவட்டம், ஆலங்குளம் அருகே கல்லூத்து கிராமத்தில் நெல்லை திருமண்டல நிர்வாகத்துக்கு உட்பட்ட டிடிடிஏ துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 120 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.கோடை விடுமுறை முடிந்து 10ம் தேதி பள்ளி திறக்கப்பட்டது. பள்ளிக்கு புதிய தலைமை ஆசிரியராக பால்ராஜ் என்பவர் பொறுப்பேற்றார். பள்ளியில் 4, 5ம் வகுப்புக்கு அவர் பாடம் எடுக்க வேண்டும். ஆனால் பொறுப்பேற்றதில் இருந்து அவர் வகுப்புக்கு சரியாக வருவதில்லை என கூறப்படுகிறது. இதனால் தங்களது கல்வி பாதிக்கப்படுவதாக கூறி 4, 5ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து, அருகிலுள்ள கோயிலில் தஞ்சமடைந்தனர். இவர்களுக்கு ஆதரவாக பிற வகுப்பு மாணவர்களும் கோயிலுக்கு சென்றனர். இதனால் பணிக்கு வந்திருந்த ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், “புதிதாக நியமிக்கப்பட்ட தலைமையாசி ரியர் சரியாக பள்ளிக்கு வந்து பாடம் எடுப்பதில்லை. காலையில் கையெழுத்து போட்டு விட்டு வெளியே சென்று விடுகிறார். மாலையில் மீண்டும் வந்து கையெழுத்து போடுகிறார். இதனால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காணும் வரை குழந்தை களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்“ என்றனர். இதுகுறித்து தகவலறிந்த விகேபுதூர் போலீ சார் வந்து பேச்சு நடத்தினர். இது குறித்து ஆலங்குளம் உதவி தொடக்கக் கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment