Pages

Sunday, October 26, 2014

வாக்குச்சாவடி நிலைய அலுவலருக்கு (DLO) குறைவான ஊதியம் வழங்கப்படுவது-குறித்து

தமிழகத்தில் வருடந்தோறும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் அக்டோபர் 26 மற்றும் நவம்பர் 2 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடியும் உள்ள பள்ளிகளில் வாக்குச்சாவடி நிலைய அலுவலராக (DLO) பள்ளித்தலைமையாசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை பணியாற்றுகின்றனர். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் முக்கிய பணியான வாக்காளர் சேர்ப்பில் ஈடுபடும் தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ஆண்டுக்கு ரூபாய் 220 மட்டுமே.(எத்தனை ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும்) சில ஆண்டுகளில் 4 ஞாயிறுகள் கூட முகாம் நடைபெற்றுள்ளது. ஒரு நாளுக்கு 55 ரூபாய் மட்டுமே ஊதியமாகும். இந்தப்பணமும் உடனுக்குடன் வழங்கப்படுவதில்லை. நாகை மாவட்டத்தில் 2012க்கான தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 2013 ஆண்டுக்கான பணம் வழங்கப்படுவதில்லை.
  • தனியார் நிறுவனங்களில் கூட கூடுதலாக பணியாற்றினால் இரட்டை சம்பளம் வழங்கப்படுகிறது.
  • ஞாயிறு அன்று பணியாற்றுவதால் தலைமையாசிரியர்கள் குறைந்தபட்சம் தொடர்ச்சியாக 12 நாட்கள் பணியாற்ற வேண்டியுள்ளது.(சனிக்கிழமை பெரும்பாலும் வேலை நாளாக உள்ளது)
  • ஞாயிறு வாக்குச்சாவடி நிலைய அலுவலராக பணியாற்றும் தலைமையாசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுமுறையும் வழங்கப்படுவதில்லை.
  • மாணவர்களின் கல்வித்தரம் குறித்து அனைவரும் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களையே குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்தக் கூடுதல் பணிச்சுமை தவிர்க்கப்படலாம்.
  • வாக்காளர் பெயர் சேர்கை மற்றும் நீக்கம் ஆகிய செயல்பாடுகளில் உள்ளுர் அரசியல் பிரமுகர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடு ஏற்பாடுகிறது. இது தலைமையாசிரியர்களுக்கு சுமூகமற்ற சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.
எனவே தலைமையாசிரியர்களை இப்பணியிலிருந்து விடுவிக்கும்படியும் அல்லது வேலைக்கு தக்க ஊதியத்தை உயர்த்தி தாமதமின்றி வழங்கிடவும் தமிழகத் தலைமைத்தேர்தல் ஆணையத்தை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை மாவட்டக்கிளை கேட்டுக்கொள்கிறது.
                                          மு.லெட்சுமிநாராயணன்

                                          மாவட்டச்செயலாளர்

No comments:

Post a Comment