Pages

Saturday, July 14, 2012

OFFICIALS PLEA REJECTED IN KUMBAKONAM CASE

கும்பகோணம் பள்ளி தீ விபத்து : பள்ளி நிர்வாகிகள் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி17 பேரின் மனுக்கள் தள்ளுபடி

கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில், 2004ல் நடந்த, தீ விபத்தில், 94 குழந்தைகள் பலியான வழக்கில், விடுவிக்கக் கோரி பள்ளி நிறுவனர் பழனிச்சாமி மற்றும் கல்வி அதிகாரிகள் உட்பட, 17 பேர் தாக்கல் செய்த மனுக்களை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.

அரசு உதவி பெறும் கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில், 2004 ஜூலை 16ல் ஏற்பட்ட தீ விபத்தில், 94 குழந்தைகள் பலியாகினர். பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமி, தாளாளர் சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, முதன்மைக் கல்வி அதிகாரி எம்.பழனிச்சாமி, மாவட்ட கல்வி அதிகாரி பி.பழனிச்சாமி உட்பட 24 பேர் மீது, 2005ல், தஞ்சாவூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அப்பீல்: கல்வி அதிகாரி எம்.பழனிச்சாமி, கும்பகோணம் தாசில்தார் பரமசிவம், துவக்கக் கல்வி அதிகாரி கண்ணன் மீதான வழக்கை, அரசே வாபஸ் பெற்றது. தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி, மனு தாக்கல் செய்யவில்லை. வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி, உதவி துவக்கக் கல்வி அதிகாரி பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை, கீழ் கோர்ட் மற்றும் ஐகோர்ட் தள்ளுபடி செய்தன. பழனிச்சாமி, தாளாளர் சரஸ்வதி, மாவட்ட கல்வி அதிகாரிகள் பி.பழனிச்சாமி, நாராயணசாமி, உதவி துவக்கக் கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், மாதவன், சார்ட்டர்டு இன்ஜினியர் ஜெயச்சந்திரன், மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் பாலாஜி, கல்வி அலுவலக அலுவலர்கள் சிவப்பிரகாசம், தாண்டவன், துரைராஜ், உதவி துவக்கக் கல்வி அலுவலர் (நர்சரி பள்ளிகள்) பாலசுப்பிரமணியன், ஆசிரியைகள் தேவி, மகாலட்சுமி, அந்தோணியம்மாள், நகராட்சி கமிஷனர் சத்தியமூர்த்தி, நகர் திட்டக்குழும அதிகாரி முருகன் ஆகியோர் தங்களை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி, தாக்கல் செய்த மனுவை, தஞ்சாவூர் கோர்ட் தள்ளுபடி செய்தது.

இதை ரத்து செய்து உத்தரவிடக்கோரி 17 பேரும் மதுரை ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தனர். பாதிக்கப்பட்ட பெற்றோர் சார்பில், இன்பராஜ், தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்கவும், பள்ளி நிர்வாகிகளின் மனுக்களை தள்ளுபடி செய்யக் கோரியும் மனு தாக்கல் செய்தார். மனுக்கள், நீதிபதி ஏ.ஆறுமுகசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், அரசு வழக்கறிஞர் பிரபா, இன்பராஜ் சார்பில் வழக்கறிஞர் சுபாஷ்பாபு ஆஜராகினர். நீதிபதி, ""மனுதாரர்களை, தற்போது விடுவிக்க போதிய முகாந்திரம் இல்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது,'' என்றார்.
கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் 94 குழந்தைகள் இறந்தது தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய 17 பேரின் மனுக்களை உயர் நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
கும்பகோணத்தில் ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில் 2004-ம் ஆண்டு தீ விபத்து நேரிட்டது. இதில் 94 குழந்தைகள் இறந்தனர். இது தொடர்பாகப் பள்ளித் தாளாளர் பழனிச்சாமி, முதன்மைக் கல்வி அதிகாரி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், வட்டாட்சியர் உள்பட 24 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதில் வட்டாட்சியர் பரமசிவம், முதன்மைக் கல்வி அதிகாரி எம்.பழனிச்சாமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி ஆகியோர் வழக்கில் இருந்து ஏற்கெனவே விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் பள்ளித் தாளாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் தங்களையும் வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவை, கீழ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து 17 பேரும் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஏ.ஆறுமுகசாமி, மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் உள்ளன. எனவே வழக்கில் இருந்து மனுதாரர்களை விடுவிக்க இயலாது என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்தார்.

No comments:

Post a Comment