Pages

Wednesday, May 30, 2012

no further action on thiruvannamalai school

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், முறைகேடு நடந்த திருவண்ணாமலை மவுன்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மீது, துறை ரீதியாக எவ்வித நடவடிக்கையும் இருக்க வாய்ப்பில்லை என்பது தெரிய வந்துள்ளது.
அதிரடி சோதனை:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தி.மலை பள்ளியில் முறைகேடு நடப்பதாகவும், மாணவர்களுக்கு விடைகள் அடங்கிய நகல்கள் வினியோகிப்பதாகவும் வந்த தகவலை அடுத்து, அப்போதைய மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, ஏப்., 16ம் தேதி, அதிரடியாக பள்ளிக்குள் நுழைந்து, சோதனை நடத்தினார்.மாணவர்களுக்கு வழங்க, விடைத்தாள் துண்டுகள் வைத்திருந்ததை, ஆசிரியரிடம் இருந்து, கலெக்டரே பறிமுதல் செய்தார். இந்த விவகாரம், மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.முறைகேட்டில் ஈடுபட்ட ஏழு ஆசிரியர், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். விசாரணைக்குப் பின், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் தெரிவித்தார். இந்நிலையில், அம்மாவட்ட கலெக்டர், மதுரை மாவட்ட கலெக்டராக சமீபத்தில் மாற்றப்பட்டார்.

பள்ளி மீதான நடவடிக்கை குறித்து, மெட்ரிக் பள்ளி இயக்குனரக வட்டாரங்கள் கூறியதாவது:சம்பவம் நடந்த பள்ளிக்கு, "நோட்டீஸ்' அனுப்பினோம். அவர்கள், பதில் கடிதம் அனுப்பினர். அதன் மீது, இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை. அரசிடம் ஆலோசித்த பின், இறுதி முடிவு எடுக்கப்படும்.

குழப்பம் வரும்:எனினும், அப்பள்ளியில் தேர்வுப் பணிகளை பார்த்த ஆசிரியர்கள் தான், முறைகேடுகளில் ஈடுபட்டனர். பிரச்னை நடந்தபோது, பள்ளி தலைமை ஆசிரியர் மட்டும், பள்ளியில் இருந்தார். அவர் மீது நடவடிக்கை எடுத்தாகிவிட்டது.பள்ளிக்கு வழங்கிய தேர்வு மைய அங்கீகாரத்தை, தேர்வுத் துறை ரத்து செய்து விட்டது. இனிமேல், பள்ளி மீது நடவடிக்கை எடுப்பதற்கு, எதுவும் இல்லை என்றே கருது கிறோம். பள்ளியில், 4,000 மாணவர் படித்து வருகின்றனர். பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுத்தால், குழப்பங்கள் ஏற்படும்.இவ்வாறு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்மூலம், முறைகேடு நடந்த பள்ளி மீது, மேற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் கிடையாது என்பதும், தொடர்ந்து பள்ளி இயங்கும் என்பதும் தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment